/indian-express-tamil/media/media_files/jkklKFpw7KSxiVHDsdWd.jpg)
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரம் கிராம மக்கள் 700 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசோ, மாநில அரசோ பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முற்றிலும் புறக்கணித்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக நெல்வாய் கிராமத்தில் 170 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு போராட்டக் குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வருகிற ஜூன் 24 ஆம் தேதி அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் ஆந்திராவிற்கு இடம் பெயர இருப்பதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியது எனவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள போராட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன், ஆந்திர மாநிலத்தை நோக்கி ஜூன் 24 இல் கண்ணீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.