கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
11 நாள்களுக்கு பின்னர் மகளின் உடலை பார்த்ததும் தாய்-தந்தையர் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக வைத்தது.
தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் என்று ஸ்ரீமதியின் தாயார் கண்ணீர் மல்க கூறினார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து ஸ்ரீமதியின் உடலை வாங்காமல் அறப்போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி நடந்த வன்முறை வெடித்து, பள்ளி பேருந்துகள் தீ வைக்கப்பட்டன.
ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுவருகிறது.
இதனை ஸ்ரீமதியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவருகின்றனர். இதற்கிடையில் ஸ்ரீமதியின் உடற்கூராய்வு அறிக்கையில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் மீண்டும் உடற்கூராய்வு செய்யும் வகையில் அவரது உடலை எரிக்க வேண்டாம், புதைக்கலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து ஸ்ரீமதியின் உடல் புதைக்கப்பட்டது. அப்போது அவரது இறுதிச் சடங்கில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். வெளிநபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.