இனி சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய வேண்டுமானால், கார் பார்க்கிங் வசதி இருப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வர இருக்கிறது.
சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், காரை பார்க் செய்வதற்கான இட வசதி குறைவாக இருக்கிறது. இதனால் கார் வாங்குபவர்கள் சிரமம் அடைவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 92 லட்சம் கார்கள் சென்னையில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போதும், அதன் எண்ணிக்கை உயர்ந்து இருக்கும். ஆனால், இத்தனை கார்களையும் முறையாக பார்க் செய்வதற்கு போதுமான இடவசதி இல்லை. பல கார்கள் சாலையோரங்களில் தான் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் புதிய திட்டம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, இனி கார் வாங்குபவர்கள் தங்களிடம் பார்க்கிங் வசதி உள்ளது என்பதை உறுதி செய்யவேண்டும் என்று சென்னைப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் முன்மொழிந்துள்ளது. இதை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும் ஏற்றுக்கொண்டது.
இது குறித்து சென்னைப் போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, "சிலரிடம் ஒரு காரை பார்க் செய்வதற்கான வசதி மட்டுமே இருக்கும். ஆனால், அவர்கள் மூன்று கார் வைத்திருப்பர்கள். ஒரு கார் பார்க்கிங்கில் இருக்கும்; மீதம் இரண்டு கார் வீதியில் இருக்கும். இது போக்குவரத்துக்கும், சுற்றுப்புறத்துக்கும் பெரும் இடையூறு. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படும்" எனக் கூறினார்.