/indian-express-tamil/media/media_files/2025/05/24/IWFhCGqqpoY7nkcHMAoi.jpg)
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தை நெடுங்காலமாக பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த சூழலில் இந்தப் பேருந்து சேவையை கிளாம்பாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தது. இதனால், பயன்பாட்டு ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அவை அனைத்தையும் விரைந்து சீரமைப்பதாக அரசு உறுதியளித்தது.
இந்நிலையில், தற்போது வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சில இன்னல்கள் இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் பாரதி தம்பி மற்றும் அ.தா. பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில், சென்னையின் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய முடிவே தவறானது என்று அ.தா. பாலசுப்ரமணியன் சுட்டிக் காட்டியுள்ளார். ஏனெனில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு 27 கிமீ தூரத்திலும், கோயம்பேடு 32 கிமீ தூரத்திலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னையின் மையப்பகுதியான பாரிமுனை 57 கிமீ தொலைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார ரயில் மூலமாக கிளாம்பாக்கத்தை அடைய வண்டலூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டி இருப்பதாக கூறும் அவர், அங்கிருந்து சாலையை கடந்து செல்லும் வசதி சீராக இல்லை எனவும், மினி பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் ஷேர் ஆட்டோக்களில் சுமார் ரூ. 50 வரை வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். இது தவிர வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடாமல், சாலையிலேயே இறக்கி விடுவதாகவும் அவர் கூறுகிறார்.
இது தவிர சாலையைக் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல சிக்னல் வசதி இல்லாத காரணத்தினால் ஆபத்தான முறையில் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சென்னையின் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இது மிகுந்த சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/24/xGFVUi814cmu4rVGivfp.jpg)
எனவே, கிளாம்பாக்கத்தை எளிதாக அடைய ரயில், மெட்ரோ ரயில் வசதிகள், பேருந்து நிலையத்திற்கு எதிரிலும், வண்டலூர் ரயில் நிலையத்திற்கு எதிரிலும் நடைமேம்பாலம், எதிர் திசையில் பேருந்து நிறுத்தம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அ.தா. பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக சிக்னல் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். முதியோர் மற்றும் சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறும் அவர், இவை அனைத்தையும் அரசு விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அ.தா. பாலசுப்ரமணியனின் இப்பதிவை பகிர்ந்த பாரதி தம்பி, தன்னுடைய அனுபவங்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் மாநகர பேருந்துகளில் இருந்து பயணிகளை இறக்கி விடும் இடத்திற்கும், பயணிகள் ஏற வேண்டிய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கும் தூரம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக பேட்டரி கார்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/24/nugThvZbmpLceMnh5MXT.jpg)
மின்சார ரயில் மூலம் வண்டலூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல சிரமமாக இருந்தாலும், கிளாம்பக்கத்தில் தற்போது புறநகர் மின்சார ரயில் நிலைய பணிகள் நடைபெறுவதால் இந்த சிக்கல் விரைவில் நீங்கும் என்று பாரதி தம்பி கூறுகிறார். இது தவிர வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், பயணிகளை பேருந்து நிலையத்திலேயே இறக்கி விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இவ்வாறு சாலைகளில் பயணிகள் இறக்கி விடப்படுவதால், அங்கு கழிவறை வசதிகூட இல்லாமல் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து மற்றும் மின்சார ரயில் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைவதற்கு பொது போக்குவரத்தாக இருப்பதால், அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனடிப்படையில், கிளாம்பாக்கத்தை சென்றடையும் வழிமுறைகளை எளிமைப்படுத்தினால் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று பாரதி தம்பி அறிவுறுத்துகிறார்.
எனவே, இத்தகைய குறைகள் அனைத்தையும் கூடுமானவரை அரசு விரைந்து சீரமைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.