ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று(ஏப்ரல்22) நண்பகல் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் குறைந்தது இருபத்து ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மினி சுவிட்ஸர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில், சீருடை அணிந்திருந்த பயங்கரவாதிகள் குழு ஒன்று சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பஹல்காம் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த சந்துரு பாதிக்கப்படவில்லை என அவரது மனைவி தொலைபேசி வாயிலாக நியூஸ் 18 செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தெரிவித்த சந்துருவின் மனைவி, "மாரடைப்பு ஏற்பட்டதால் சந்துரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் அல்ல.
பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சந்துரு இல்லை. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே சந்துருவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலை கணக்கெடுக்கும் போது தவறுதலாக சந்துரு பெயர் இடம்பெற்றிருக்கலாம்" என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிய உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 011 - 24193300 என்ற எண்ணுக்கு போனும் 9289516712 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பும் செய்யலாம்.