சென்னை திருவல்லிக்கேணியில், குடிபோதையில் கார் ஓட்டிய நபரிடம், முதன்முறையாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, ஜூலையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத தொகையை வசூலிக்கும் நடைமுறை, நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.ஆனால், இந்த நடைமுறையை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், ஆக., 14ல் அமல்படுத்த துவங்கினர்.
'ஹெல்மெட்' அணியாமல், 'பைக்' ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்வோரிடம், இதற்கு முன், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி, 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்; ஓட்டுனர் உரிமம், மூன்று மாதம் ரத்து செய்யப்படும். சிறுவர் - சிறுமியர் வாகனம் ஓட்டினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம். அவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் காப்பாளருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.குடிபோதையில் வாகனம் ஓட்டினால், இதற்கு முன், 2,000 ரூபாய் அபராதம்; இனி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில், 24 வகையான, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, சென்னையில், வாகன ஓட்டிகளிடம், 'டிஜிட்டல்' முறையில் அபராதம் வசூலிக்க, 352 போலீசாருக்கு, 'இ - சலான்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, இந்த கருவிகளில், உயர்த்தப்பட்ட அபராத தொகை குறித்த விபரங்களை, உள்ளீடு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில், உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் மட்டும், இ - சலான் கருவி வாயிலாக, அபராதம் வசூலிக்கக் கூடாது. குற்றத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள், நீதிமன்றத்தில் தான் அபராதம் செலுத்த வேண்டும். அதன்படி, முதல் முறையாக, சென்னை, திருவல்லிக்கேணியில், குடிபோதையில் கார் ஓட்டிய சந்தோஷ் என்பவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.