மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மேயரை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட இருக்கிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை கடந்த 2015ம் ஆண்டு வரை நேரடியாக மக்களே தேர்வு செய்து வந்தனர். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யும் முறை தற்போது அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபை இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.
இதனால் மேயர்கள், உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தடுக்கப்படும். இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி பணிகளை இதன் மூலம் விரைந்து முடிக்க முடியும். இதன் காரணமாகவே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது.