108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் விளங்குகிறது. இங்குள்ள வெள்ளித்திருமுத்தம் என்ற கிராமத்தில் அடங்கிய ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பு கோயிலுக்குச் சொந்தமானது. இதனால், இங்கு குடியிருந்து வரும் மக்கள் தங்களது சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது.
ஆனால், 1867-ம் ஆண்டின் இனாம் சார் பதிவேட்டில் இந்தப் பகுதி நத்தம் என்றும், ரங்கநாதர் கோயிலின் 4 பிரகாரங்கள் கோயில் புறம்போக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
1963-ம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது.
1930-ம் ஆண்டு ‘அ’ பதிவேட்டின்படி வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள 329 ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தம் என உள்ளது. ஆனால் வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பும் தங்களுக்குச் சொந்தம் என கோயில் நிர்வாகம் கூறியது.
இதனால், 2007 முதல் இந்த பகுதியில் உள்ள மனைகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டனர். இது குறித்து ஸ்ரீரங்கம் சமூக நல அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் உயர் நீதிமன்ற கிளை மேற்கண்ட வழக்குகளில் இந்த நிலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாத்தியப்பட்டதுதான் எனத் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்ய ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த சமூக ஆர்வலர்கள், நலச்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்து ஸ்ரீரங்கம் மின்வாரிய உதவி பொறியாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார்.
அதில், “ஸ்ரீரங்கம் தாலுகா வெள்ளித் திருமுத்தம் கிராமத்தில் டி.டி.1027-ல் கட்டுப்பட்ட வார்டு ஏ.பி.சி., உள்ளடங்கிய பிளாக்குகளில் சுமார் 329.91 ஏக்கர் நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், ஸ்ரீரங்கம் தாலுகா வெள்ளித் திருமுத்தம் கிராமம் வார்டு ஏபிசி உள்ளடக்கிய கிழக்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, கிழக்கு, தெற்கு மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள், கிழக்கு தெற்கு அடையவளஞ்சான் வீதிகள், சாத்தார வீதி, வ.உ.சி.தெரு உள்ளிட்ட வீதிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாத்தியப்பட்ட டி.டி.1027-ல் கட்டுப்பட்ட சுமார் 329.91 ஏக்கர் கொண்ட இடங்களில் பிளாக் வார்டு, டவுன் சர்வே எண்களில் உள்ள இடங்களில் தனிநபர்கள் பெயரில் மின் இணைப்பு ஏதும் வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், “ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 30 பேர் தனிப்பட்ட முறையில் தனித்தனியாக திருச்சி முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர்.
இந்த வழக்கில், உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வழக்கறிஞரின் அறியாமையால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு ஆதரவாக 2 நபர் கொண்ட அமர்வு கடந்த 03-03-2023 அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை தொடர்பாக இன்றுக்கூட திருச்சி எம்.பி., திருநாவுக்கரசரை சந்தித்து மனு கொடுத்திருக்கோம்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“