/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project13.jpg)
மறைந்த தி.மு.க பொதுச் செயலாளர், மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (டிசம்பர் 19) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.
தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வளாகத்திற்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' எனப் பெயர் சூட்டி, மேலும், அங்கு அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை திறந்து வைத்தார்.
பேராசிரியர் அன்பழகன் தமிழகத்தின் கல்வித்துறை அமைச்சராக 2 முறை பதவி வகித்தவர். அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-வது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்" எனக் கூறி பதிவிட்டுள்ளார்.
மேலும், "எளிமையும் உறுதியும் அவர் அடையாளங்கள். திராவிடவியலுக்கு விளக்கவுரை தீட்டினார், விளக்காகவே வாழ்ந்தார். உடலால் மறைந்தாலும் உணர்வால் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமையான தத்துவப் பேராசான் பேராசிரியர் வழியில் தமிழின மீட்சிக்கு உழைப்போம்" என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.