மாதவிடாயின் போது பெண்களுக்கு மருத்துவச் சான்று இல்லாமல் விடுப்பு வழங்கக்கோரி மத்திய அரசை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த அய்யா என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ மாதவிடாய் காலங்களில் மருத்துவச் சான்றிதழ் வழங்காமல் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். பிகாரில் மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.
கேரளாவில் தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விடுப்பு வழங்குகின்றனர். தமிழகத்திலும் மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்க வேண்டும் “ என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை வகுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது சம்பந்தமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்தை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது என்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இதுபோல மனுதாரர் மத்திய அரசை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“