/indian-express-tamil/media/media_files/2025/08/10/sanitation-workers-issuet-2025-08-10-16-44-07.jpg)
'கோரிக்கை நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்'... தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய 2 மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சா்கள் KN. நேரு, சேகா்பாபு ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவுடன் நேற்று 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினர். ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினர். இது போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் முயற்சி என்றும், அரசு Ramky என்ற தனியார் நிறுவனத்திற்காக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமாக்கப்படுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு என தி.மு.க. அரசு ஈடுபடுகிறது. போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் தகவல் பொய்யான தகவல் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தபோதும், அரசு தங்களை மதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஒருபோதும் முடிவடையாது என்றும், ரவுடிகள் துப்பாக்கி காட்டி மிரட்டினாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அவர்கள் உறுதிபடக் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.