மத்திய அரசு சிறுபான்மையினருக்கு கொடுக்கும் உதவித்தொகையை குறைத்துள்ளதால் சிறுபான்மை மக்கள் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை மக்களின் வாக்கிற்காக இதேப்போன்று செய்வாதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மையினர் கல்வி நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "மத்திய அரசு, நாட்டில் மத சிறுபான்மையினர் இருக்க கூடாது என்று நினைக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகையை 38 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் சிறுபான்மை மக்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைகின்றனர். மத்திய அரசு இதை செய்வதன் மூலம் பெரும்பான்மை மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு இது போன்று உதவித் தொகைகளை குறைக்கச் செய்கிறது. இதன்மூலம் மத்திய அரசு சிறுபான்மையினர் வாழ்வதற்கான உரிமைகளை மறுக்கிறது" என்று கூறினார்.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”