ஏழைகளுக்கு சிறப்பு நிதியாக 2000 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்த்தும், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை 2000 ரூபாய் நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க கோரியும் விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை எனவும், இதற்காக அரசு மேற்கொள்ளும் நடை முறையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதோடு, முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது ஏழைகளாக கருதப்படுபர்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி எனவும், இந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார் என, அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார் யாருக்கு உதவித்தொகை வழங்குவது என பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
அப்போது மனுதரார் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே 7 பேர் கொண்ட குழு மட்டுமே இருப்பதாக அரசு பத்திரிக்கைக்கு வெளியிட்ட செய்திகளில் தெரிவித்துள்ளது. அதனையே அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் 9 பேர் குழு என உள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் வரம்புகள் அதிகரிக்கிறது. எனவே திருத்தப்பட்ட அரசாணையை அரசுத்தரப்பில் தாக்கல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து புதிய மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர்.