ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை, சிப்காட்டில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இருவர், பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அப்போது, காவல் நிலையத்தின் இரும்பு கதவு மூடப்பட்டிருந்ததால், அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்தது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழைய குற்றவாளிகள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.