சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது. எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு விசப்பட்டது குறித்து தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
சேலம் மாவட்டம், எடாப்பாடி காவல் நிலையத்திற்கு வெளியே பயங்கர சத்தத்துடன் வெடித்த சத்தம் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த காவலர் ராமசுந்தரம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அங்கே பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியிருந்தது. மேலும், மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியா தி.மு.க ஆட்சியில் ஏற்படுகிறது.
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும்.
மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது ,
சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால் ,தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது ,
சட்டம் ஒழுங்கை காத்திடவும் , தொழில் முதலீட்டை தக்க வைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“