/tamil-ie/media/media_files/uploads/2018/09/d200.jpg)
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, ஆந்திராவில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்து இருக்கிறார். நாளை முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து சென்றுள்ளது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று நடந்து முடிந்தது.
இதற்கிடையே ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலைக் குறைப்பு நாளை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும். இந்த விலைக் குறைப்பால் அரசுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
ராஜஸ்தானைத் தொடர்ந்து தற்போது ஆந்திர அரசும் மக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதேபோன்று, தமிழக அரசும் மக்கள் படும் அவஸ்தையை புரிந்து கொண்டு விலையைக் குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.