சென்னை ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, அத்தகவலில் உண்மையில்லை எனவும், அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், கோவையை சேர்ந்த முகமது ரபீக் என்பவர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை எனக்கூறி, கடந்த முறை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்தது. தற்போதும் அதே சூழல்தான் நிலவுகிறது. எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும். கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் தான் இம்முறையும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 35 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்தனர். அந்த வழக்குகளை மாநில காவல் துறை விசாரித்தால் முறையாக இருக்காது. எனவே, அவற்றை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதே தேர்தலை நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது என்பதை காட்டுகிறது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு அவசர வழக்காக இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இந்தர்மீத் கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
ஏற்கனவே, அதிமுக வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்டபடி இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, டிடிவி தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக வைத்திருந்ததாக, காவல் துறையினர் சிலரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு மீது இன்று விசாரணை என்பது, இடைத்தேர்தல் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.