/indian-express-tamil/media/media_files/2025/08/27/pillaiyarpatti-2025-08-27-09-30-41.jpg)
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம்
உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர்.
கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில், உற்சவர் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் சிம்மம், குதிரை, யானை போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 23-ஆம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன. வெள்ளி மூஷிகம், யானை, குதிரை, ரிஷபம், பூதம் மற்றும் சிம்மம் எனப் பல்வேறு வாகனங்களில் அவர் ஊர்வலம் வந்த காட்சிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தின.
விழாவின் முக்கிய நிகழ்வான சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து விநாயகரின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த விழாவின் உச்சகட்ட நிகழ்வான 'தீர்த்தவாரி' இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, விழாவின் 9-ம் நாளான நேற்று, பக்தர்கள் எதிர்பார்த்திருந்த தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பெரிய தேரில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் எழுந்தருள, அதனைப் பின்தொடர்ந்து வந்த சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார். சண்டிகேஸ்வரரின் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வழிபட்டது தனிச்சிறப்பு.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மூலவருக்கு சாத்தப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தில், கற்பக விநாயகர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், இந்த அரிய அலங்காரத்தில் விநாயகரை தரிசனம் செய்து மனமுருகினர். இந்த விழாவின் இறுதி நிகழ்வாக, இன்று (விநாயகர் சதுர்த்தி) முக்கிய பூஜைகள் மற்றும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.