இன்று( 16.5.18) வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி கண்ட மாணவர்களை விட, தோல்வியை தழுவிய மாணவர்கள் மீது தமிழக அரசு அதிக கவனம் எடுத்து புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தாண்டு 91.1 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதே சமயத்தில் கடந்தாண்டை விட 1 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைவு என்பது கவனிக்க தக்கது.
இந்நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், உங்களுக்கான மற்றொரு வாய்ப்பு வரும் ஜீன் 25 ஆம் தேதி இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதாவது தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி மறுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும், எதிர்ப்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவ - மாணவிகள் மறு கூட்டலுக்கு நாளை (17.5. 18) விண்ணப்பிக்கலாம். அத்துடன் தேர்வில் துவண்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் விதமாக 11417 என்ற ஹெல்ப் லைன் நம்பரும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நம்பரில் தொடர்புக் கொண்டு பேசினால் மாணவர்களுக்கு தேவையன கவுன்சிலிங் உதவிகள் கிடைக்கும் என்றும், மாணவர்கள் யாரும் தோல்வியைக் கண்டுப் பயப்படவோ, அதை நினைத்து தவறான முடிவுகளை தேர்ந்தெடுப்பதோ முற்றிலும் தவறு என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.