/indian-express-tamil/media/media_files/2025/07/27/modi-rajaraja-chozhan-2025-07-27-16-22-12.jpg)
ராஜராஜ, ராஜேந்திர சோழர்களுக்குத் தமிழ்நாட்டில் சிலை: பிரதமர் மோடி உறுதி!
ராஜேந்திர சோழனின் 1,005-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத்தொடங்கிய 1000-வது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச்சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா்கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை (ஜூலை 23) மாலை தொடங்கியது.
இந்த விழாவின் நிறைவு நாளான இன்று பிரதமா் மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா தன் குழுவினருடன் திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்தினார். தொடக்கமாக, ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து முடிக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார். பார்வையாளர்கள் அனைவரும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர். பிரதமர் மோடியும் அதனை ரசித்து பார்த்தார். இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா, “வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” எனக் கூறினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர், "வணக்கம் சோழ மண்டலம்" என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். மேலும், "நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று சிவனைப் போற்றிப் பேசினார். இளையராஜாவின் சிவ பாடல்கள் மழைக்காலத்தில் பக்தி நிரம்பியதாக இருந்தது. காசியின் பிரதிநிதியான இந்த சிவ கோஷம் புல்லரிப்பைத் தருகிறது. 140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப்போனேன். ராஜராஜன், ராஜேந்திரன் இரு பெயர்கள் பாரதத்தின் அடையாளம். சிவனை வணங்குபவர் சிவனிலேயே கரைந்து விடுகிறார். பெருவுடையாரை வணங்க கிடைத்த வாய்ப்பு பெரும்பேறு. இலங்கை, மாலத்தீவு, தென் கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப்பேரரசு. பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாம்ராஜ்ஜியம், ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.
இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கும் முன்னோடிகள் சோழர்கள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திரன். காவிரி கரைக்கு கங்கை கரையில் இருந்து வந்துள்ளேன். ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து பொன்னேரியில் நிரப்பினார். நான் காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரி கரைக்கு கங்கை நீரைக்கொண்டு வந்திருக்கிறேன். காசியில் இருந்து இங்கு கங்கை நீரை எடுத்த வந்தது எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழீஸ்வரம். உலகம் முழுவதும் பேசும் நீர்மேலாண்மைக்கும் சோழர்களே முன்னோடிகள். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். இன்றைய பாரதம் அதன் கடந்த கால வரலாறுகளால் பெருமிதம் கொள்கிறது. உலகில் நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் எனப் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வளிக்கும் பாதையாக சைவ சித்தாந்தம் இருக்கிறது. அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை. அன்பே சிவம் என்றார் திருமூலர். இதைக் கடைபிடித்தால் உலகின் சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமூலரின் வழியில்தான் இன்று பயணிக்கிறது இந்தியா. களவாடப்பட்ட கலைச் சின்னங்களை மீட்டுள்ளோம். இதில் 36 தமிழகத்தைச் சேர்ந்தவை.
சோழப் பேரரசு இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்றும், இந்தியாவின் ஜனநாயகத்தின் தாய் என்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றது என்றும் வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். பிரிட்டனின் 'மாக்னா கார்ட்டா' பற்றி பேசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சோழப் பேரரசில் குடவோலை முறைப்படி ஜனநாயகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கங்கை நீர் கொண்டுவந்த ராஜேந்திர சோழன்: மற்ற நாடுகள் தங்கம், வெள்ளி, கால்நடைகளை கொண்டுவந்த நிலையில், ராஜேந்திர சோழன் கங்கை நதிநீரை கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார். காசியிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதி என்ற முறையில், இன்று மீண்டும் கங்கை நீர் இங்கு கொண்டுவரப்பட்டதில் மகிழ்ச்சி தெரிவித்தார். சோழ மன்னர்களின் இந்த செயல்கள் 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற பாரம்பரியத்திற்குப் புதிய ஆற்றலை அளிப்பதாகக் கூறினார்.
ராஜராஜன், ராஜேந்திரன் சக்தி வாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்தார்கள். சக்திவாய்ந்த அக்கடற்படையை விஸ்தரித்தார் ராஜேந்திரன். பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூர். நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் உதாரணம். புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழ சாம்ராஜ்ஜியம். தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும். பெரும் அறிவிப்பை வெளியிட்டு முப்பெரும் விழாவில் பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
விழாவில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், திருமாவளவன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள பொன்னேரியில் பிரதமர் மோடி வந்திறங்கினார்.
தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்தபடி சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ மேற்கொண்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.