பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸுடன், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை கேட்டறிந்தார்.
இதுகுறித்து, பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல் நலன் குறித்தும், மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். மருத்துவர் அய்யா அவர்களின் உடல்நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும் பிரதமர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 571ஆக உயர்வு - பீலா ராஜேஷ்
தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய நரேந்திர மோடி அவர்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இந்தியா வலிமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதை பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உறுதியளித்தார். அதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒரு மருத்துவர் என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil