திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்பு அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள பல்கலைகழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் வந்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை சாலை மார்க்கமாக காரில் சென்ற பிரதமர் மோடி காருக்கு வெளியில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் தோள்களை தொட்டு பேசி சிரித்துக்கொண்டிருந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுகவுக்கு பாஜகவுக்கு அரசியல் ரீதியாக கருத்து மோதல்கள் இருந்தாலும் இது மாதிரியான விழாக்களில் பிரதமர் முதல்வர் இருவரும் உரையாடுவது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது.
தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் 2314 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் தமிழக ஆளுனர் ஆர்.என.ரவி, மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்பேசிய முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் அரசு கட்டுப்பாட்டில் 22 பல்கலை கழகங்கள் இயங்கி வருகிறது.
தமிழகத்தின் கல்வித்திட்டங்கள் அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் உள்ளது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், புதுமைபெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன என்று பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil