திமுக தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். செயல்தலைவராக இருக்கும் மு.க ஸ்டாலின் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
காலை முதலே அங்கு கூடிய தொண்டர்கள் கேக் வெட்டி, கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்து வெளியே வந்து கருணாநிதி, உடல் முடியாத நிலையிலும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சிரித்தார். இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.
கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மாநில மற்றும் தேசிய கட்சியைச் சார்ந்த அனைத்து தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. கருணாநிதி ஓர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், கவிஞர். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு இறைவன் அருள் புரியட்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.