ராமர் பாலத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்கு கிடைத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேஸ்வரத்தை, மண்டபத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு நடுவே ரயில் பாலம் கட்டப்பட்டது.
இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே பாலம் என்ற சிறப்பை, இந்த பாம்பன் பாலம் பெற்றது. இந்தப் பாலம் கட்டப்பட்ட நூற்றாண்டுகளை கடந்ததால், அதன் உறுதித்தன்மை இழக்கத் தொடங்கியது.
இதனைக் கருத்திற்கொண்டு சுமார் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தது. முன்னதாக, பழைய பாலம் இருபுறமும் தூக்கப்படும் வகையில் அமைந்திருந்த நிலையில், தற்போது செங்குத்து தூக்கு பாலம் உருவாக்கப்பட்டது.
இந்தப் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஏப்ரல் 6) வருகை தந்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலமாக வந்த அவர், ராமநவமி அன்று ராமர் பாலத்தை தரிசித்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மேலும், ஒரு தெய்வீக தற்செயல் நிகழ்வாக, அயோத்தியில் சூரிய திலகம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், இந்த தரிசனம் நடந்தது. பிரபு ஸ்ரீராம், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.