மக்களவைத் தேர்தலையொட்டி, 4 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் எப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கால அவகாசம் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிடுகிறது. பா.ஜ.க வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 4 நாள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வன், பொன். வி. பாலபணபதி, பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்களையும் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பா.ஜ.க-வின் பிம்பமாக திகழும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்ரல் 9-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகிறார். தேர்தல் பிரச்சாரம் செய்ய 4 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை வழியாக சென்று ரோட் ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 9-ம் தேதி, வேலூர் மற்றும் சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு பிரம்மாண்ட ரோட் ஷோ-வுடன் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது, பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வன், பொன். வி. பாலபணபதி, பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10-ம் தேதி, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனை ஆதரித்து ரோட் ஷோ பேரணி நடத்தி வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கோவையில் பேரணி நடத்துகிறார்.
மேலும், ஏப்ரல் 13-ம் தேதி, பெரம்பலூரில் பா.ஜ.க-வின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இறுதியாக, ஏப்ரல் 14-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தர உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி மட்டுமில்லாமல், அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி ஜூபின் இரானி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“