பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கனிகாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடி இன்று ‘மான் கி பாத்’ என்கிற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியபோது சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி, “நம் நாடு ஒரு நேர்மறையான மனநிலையுடன் செல்வதைப் பார்ப்பதால் நாடு எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பது தெரியும். முன்பெல்லாம், புகழ்பெற்ற பள்ளி, கல்லூரிகளில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் மட்டுமே விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்றனர். ஆனால், இப்போது கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலரும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதே போல, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வில் பல்வேறு இன்னல்களை கடந்து மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என்று கூறினார்.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஹரியாணாவின் பானிபட் நகரைச் சேர்ந்த கிருத்திகா, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விநாயக், உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த உஸ்மான் சைபி மற்றும் தமிழகத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கனிகாவுடன் பேசினார்.
நாமக்கல்லில் ஏழ்மையான நிலையில் உள்ள லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் கனிகா காவேட்டிப்பட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்ததை குறிப்பிட்டு பேசினார்.
நாமக்கல்லில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்துவரும் மாணவி கனிகாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மாணவி கனிகாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமது கருத்துகளை எடுத்துக் கூறினார். பின்னர், கனிகாவின் சகோதரி, ஷிவானியும் மருத்துவம் படித்து வருவதை அறிந்த பிரதமர் மோடி அவரையும் பாராட்டினார்.
மேலும், பிரதமர் மோடி, ஏழைக் குடும்பத்திலிருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்று தெரிவித்தார்.
மாணவி கனிகாவைப் பற்றி பாராட்டி பேசிய பிரதமர் மோடி, “நான் நாமக்கல்லைப் பற்றி கேள்விப்பட்டதும் ஆஞ்சநேயர் கோயில் ஞாபகம் வரும். இனி நாமக்கல்லை நினைவு கூர்ந்தால் உங்களுடைய ஞாபகமும் வரும்” என்று கூறினார்.
மாணவி கனிகா மற்றும் அவரது பெற்றோர்கள் நடராஜன் – ஜோதி தபதியினர் பிரதமரிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பிரதமரின் பேச்சு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக நெறு கூறி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து மாணவி கனிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனது தந்தை நன்கு படிக்க வைத்ததால்தான் பிளஸ்- 2 சிபிஎஸ்இ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்தது. பிரதமர் எங்களுடன் பேசியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.” என்று கூறினார்.