/indian-express-tamil/media/media_files/2025/05/21/HQmdU1dm4Pf2T6syiKx5.jpg)
அன்புமணிக்கு எதிராக அதிரடி முடிவா? ராமதாஸ் தலைமையில் 6 நாட்கள் தொடர் கூட்டங்களுக்கு ஏற்பாடு
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ராமதாஸ் மீது அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 19-ந் தேதி பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். இன்றுடன் அந்தக் கெடு முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.
இந்நிலையில், இன்று சமூக ஊடகப் பேரவை கூட்டம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நிர்வாகக் குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் என 6 நாட்களுக்கு தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு: ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்.
செவ்வாய்க்கிழமை: பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
அடுத்தடுத்த நாட்களில்:
அக்டோபர் 3-ஆம் தேதி: மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்.
அக்டோபர் 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு: செய்தியாளர்கள் சந்திப்பு.
அக்டோபர் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு: பா.ம.க. மாநில நிர்வாகிகள், வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாநில இளைஞர் சங்கம், மாநில மாணவர் சங்கம், மாநில மகளிர் சங்கம் மற்றும் பிற அணி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டங்கள் அனைத்தும் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.