வன்னியர் விரோதி தி.மு.க; ஒருவர் கூட வாக்களிக்க கூடாது: அன்புமணி பேச்சு

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்திருந்தால், வன்னிய சமூகத்தில் 3800 மருத்துவர்கள் உருவாகியிருப்பார்கள் என்றும், 6000 பேர் அரசு வேலைக்குச் சென்றிருப்பார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்திருந்தால், வன்னிய சமூகத்தில் 3800 மருத்துவர்கள் உருவாகியிருப்பார்கள் என்றும், 6000 பேர் அரசு வேலைக்குச் சென்றிருப்பார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss Speech

தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

Advertisment

இன்று விழுப்புரத்தில் பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்படி, "ராமதாஸ் கடந்த 45 ஆண்டுகளாக அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப் போராடி வருகிறார். ஆனால் ஆளும் கட்சிகள் அதனை செய்ய மறுக்கின்றன. 1987-ல் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் 21 தியாகிகள் உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பின்தங்கிய மக்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்கள் இன்னுயிரை நீத்தார்கள்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றும், மாநில அரசே தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும் தமிழக அரசு தாமதிப்பது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தன்னிடம் உள்ள தரவுகளை சமர்ப்பித்தால் போதுமானது. ஆனால் தமிழக அரசு அதனை செய்ய மறுக்கிறது.

திமுக-விற்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. திமுக என்றால் வன்னியர் விரோதி, சமூக நீதிக்கு எதிரி என்று பொருள். திமுக-வில் 23 சட்டமன்ற உறுப்பினர்களும், 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என மொத்தம் 28 வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் என்றாவது ஒருநாள் முதலமைச்சரை சந்தித்து, தங்கள் சமூக மக்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதையும், அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை என்பதையும் பேசியிருக்கிறார்களா?

Advertisment
Advertisements

தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 38 வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியில் அமர்ந்து, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் சட்டமன்றத்திற்குள் செல்வோம் என்று போராட்டம் நடத்தத் தயாரா?

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி 10.5% இட ஒதுக்கீடு வழங்கினார். இது பாமக-வின் பல கட்ட போராட்டங்களின் விளைவே ஆகும். 2019-2021 காலகட்டத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகே 2021-ல் இந்த இட ஒதுக்கீடு கிடைத்தது. எனக்கு 10.5% உடன்பாடு கிடையாது. வன்னியர்களுக்கு 18% இட ஒதுக்கீடு வேண்டும். வேறு வழியில்லாமல் அன்றைக்கு நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

10.5% இட ஒதுக்கீடு ஓராண்டு மட்டும் அமலில் இருந்திருந்தால், இன்று 3800 வன்னியர்களுக்கு எம்பிபிஎஸ் கிடைத்திருக்கும், 800 பேருக்கு மருத்துவ மேற்படிப்பு கிடைத்திருக்கும், 6000 பேருக்கு பொறியியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும், 6000 பேருக்கு தமிழக அரசின் பல்வேறு பணியிடங்களில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும், 80 ஆயிரம் மாணவர்களுக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும். இந்த வாய்ப்புகள் வன்னியர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு திமுக அரசுதான் காரணம் .

எனக்கு வயிறு எரிகிறது. இவ்வளவு புள்ளிவிவரங்கள் இருந்தும் எதுவும் நடக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் செய்யவில்லை. 2019 விக்ரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? ஸ்டாலின் அரசு வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இது முதல் கட்ட ஆர்ப்பாட்டம் தான். அடுத்ததாக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மூன்று ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தருவதாக பொய் சொல்லி ஏமாற்றிய திமுக அரசு, இப்போது கொடுக்க முடியாது என்று கூறுகிறது. ஜனார்த்தனன் ஆணையம், இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீட்டை 180 நாட்களிலும், அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீட்டை 243 நாட்களிலும் வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 1208 நாட்களாகியும் தமிழக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது" என்று அவர் கூறினார்.

செய்தி - பாபு ராஜேந்திரன், விழுப்புரம்

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: