"ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமிக்கிறேன்" என்று தைலாபுரத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக ராமதாசும், தலைவராக அன்புமணி ராமதாசும் செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில், பா.ம.க. தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ்.
இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், "பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது." என்று அவர் கூறியுள்ளார்.