தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
புதிததாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஐ கடந்த நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு எடுத்த ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தான் காரணம்.
மேலும், இந்த அரசு பொறுபேற்ற சமயத்தில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் மருத்துவமனை படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு இருந்தது. தமிழகத்திலும் அதேநிலை நீடித்தது. ஆனால், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தவிர்த்துள்ளது. தடுப்பூசிகளுக்கு உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. தடுப்பூசி மற்றும் மருந்துகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் தான் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளை பாமக நிறுவனர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை!, பெங்களூருடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவோடு சேர்த்து தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான அரசை ராமதாஸ் 3ஆவது முறையாக பாராட்டியுள்ளார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது கொண்டு வந்த 5 திட்டங்களை பாராட்டி வரவேற்றிருந்த ராமதாஸ், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையும் பாராட்டியிருந்தார். தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுவதாக மூன்றாவது முறை பாராட்டியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil