/indian-express-tamil/media/media_files/aiw8ddbfmgVYmi6UD3Wz.jpg)
"அன்புமணி உடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். எல்லாம் சரியாகிவிட்டது" என்று பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த மோதலுக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்த ராமதாஸ் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கட்சியின் தலைவர், நிறுவனர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். சாந்தமாக பதில் சொல்ல வேண்டும். தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணியில் இருந்தபோது கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
'கூட்டணியில் இருந்து கொண்டே டாக்டர் ராமதாஸ் உங்களை தினமும் விமர்சிக்கிறாரே?' என்ற கேள்விக்கு கலைஞர், 'தைலாபுரத்திலிருந்து எனக்கு தினமும் தைலம் வருகிறது' என்று பதில் கூறினார். இவ்வாறு நளினமாகவும் நாகரிகமாகவும் பதில் அளிப்பதற்கு கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அன்புமணி உடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். எல்லாம் சரியாகிவிட்டது" என்று கூறினார்.
பின்னர் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமன கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை" என்று ராமதாஸ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.