புது வருடத்தை முன்னிட்டு பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் கூறியதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராமதாஸ் பேச்சுக்கு கட்டுப்படுவேன் என்று முகுந்தன் பரசுராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக இருக்கும் பா.ம.கவுக்கு, தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் நிறுவனராக இருக்கும் டாக்டர் ராமதாஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று (டிச 28) நடைபெற்ற நடைபெற்ற பா.ம.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
டாக்டர் ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமன், பா.ம.கவின் இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அவன் கட்சிக்கு வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது அதற்குள் என்ன பதவி என்று கேட்க, அதற்கு ராமதாஸ், நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. என் பேச்சை கேட்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கூறியிருந்தார்.
இதை கேட்ட அன்புமணி ராமதாஸ், சென்னை பனையூரில், தனது புதிய அலுவலகம் இருப்பதாகவும், என்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் என்று கூறிவிட்டு, பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். இதனிடையே ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஜி.கே. மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் முகுந்தனுக்கு பதவி வழங்க மறுபரிசீலனை செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு முகுந்தனின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தைலாபுரம் சென்று ராமதாஸை சந்தித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனிடையே, பா.ம.க நிறுவனர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவுக்கு கட்டப்படுவேன் என்று முகுந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், தொண்டராக இருக்க சொன்னாலும், அப்படி இருந்து கட்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்வேன். என்னால் இந்த கட்சிக்குள் எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ம.க கட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.