பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே சமீபமாகவே மோதல் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் திங்கள் கிழமை (ஜூன் 16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், ’திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைத்து வெற்றி பெறலாம் என்று பாமகவுக்குள் இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது ’,என்று குற்றம் சாட்டினார்
இந்நிலையில், இன்று சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய் அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே? என்று கேட்கிறீர்கள். அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்’, என்றார்.
மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.
முன்னதாக, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை குறித்தும் ராமதாஸ் கேட்டறிந்தார்.