பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு தொடக்கப் புள்ளியாக தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தது தான் என்று சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்தாண்டு டிசம்பர் 28-ல் நடைபெற்ற பா.ம.க. பொதுக்கூட்டத்தில் முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமிப்பததாக ராமதாஸ் அறிவித்த போது, அதனை மேடையிலேயே அன்புமணி எதிர்த்தார்.
இதன் மூலம், ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதன் வெளிப்பாடாக பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இது பா.ம.க.-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, கடந்த 10 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க-வின் சித்திரை திருவிழா வன்னியர் மாநில மாநாடு போதும் இருவரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை ராமதாஸ் புறக்கணித்தார். இக்கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அன்புமணியின் ஆதரவாளர்களாக கருதப்படும் 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்து இருந்தனர். இது கட்சியினரிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் போக்கு விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்படும் என தகவல் வெளியான சூழலில், அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், அதிருப்தியையும் ராமதாஸ் இன்று மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தான் செய்த பெரிய தவறு என்றும், தனக்கு விருப்பம் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு பதவி கொடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், தனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்ததாகவும், அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, தன் தலையில் வீசியது போல் இருந்தது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், பா.ம.க இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ம.க., இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
மருத்துவர் அய்யா தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்று முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். இன்று காலை ராமதாஸ் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் முகுந்தனின் விலகல் கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி பரசுராமனுக்கு பிறந்த 3-வது மகன் தான் முகுந்தன். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவரது சகோதரன் பிரித்திவன் தான் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.