கோவை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர், முத்திபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சிறிய அளவிலான குப்பிகள், ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 மில்லி கிராம் எடை கொண்ட போதைப் பொருள் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாருல் இஸ்லாம், அப்துல் முத்தலீப் என்பதும் கோவை தொண்டாமுத்தூரில் தங்கி, கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருளை பறிமுதல் செய்து, எந்த வகையான போதைப் பொருள் அதன் பெயர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பொருள் ரூ.16,000 இருக்கும் என்றும் என்ன வகையான போதைப் பொருள் என்பதை கண்டறிய கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரசாயன பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் சோதனை முடிந்து முடிவுகள் வந்த பின்னரே அது என்ன வகை போதைப் பொருள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஹெராயின் போன்று இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது என்றனர். கோவையில் புதிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil