/indian-express-tamil/media/media_files/2024/11/20/lBkmVmTVftwpcxnEZjeo.jpg)
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (சிறப்பு எஸ்.ஐ) ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஜன.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில், வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடைவில்லை என்றும், இந்த வழக்கில் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதால் ஜாமீன் கோரிய விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வேலியே பயிரை மேய்ந்தது போல் போலீசாரே குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இந்த வழக்கினை சாதாரண வழக்காக எடுத்து கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.