சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளைக் கிளறி பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் குப்பைகளிடையே மூட்டைகள் இருப்பதை பார்த்துள்ளனர். அவற்றில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த உடல் பாகங்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதனை வைத்தும், உடல் பாகங்கள் அழுகாமல் உள்ளதால், பெண்ணின் வலது கைரேகையைக் கொண்டு ஆதார் பதிவு மூலம் அவர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுதவிர, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் எங்கே என்று விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை நகரமாக மாறுகிறதா சென்னை?
சென்னை மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் மட்டும் வெவ்வேறு இடங்களில் 5 கொலைகள் அரங்கேறியுள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த கொலைகள் குறித்த விவாதங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.