/indian-express-tamil/media/media_files/2025/05/29/eSIX9YZViyKzQz2m8u5h.jpg)
Trichy
திருச்சி: தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, இளைஞரிடம் ₹1 லட்சம் மோசடி செய்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி வரகனேரியைச் சேர்ந்த தௌபிக், அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தேநீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் கடைக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ (என்கிற ஷியாம்) என்பவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, ஜெத்ரோ தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு தௌபிக்குடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார்.
நட்பைப் பயன்படுத்தி, காவல்துறையில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக தௌபிக்கிடம் ஜெத்ரோ ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய தௌபிக், படிப்படியாக ₹1 லட்சம் வரை ஜெத்ரோவிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால், ஜெத்ரோ வாக்குறுதியளித்தபடி வாகனங்களை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும், அவர் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தௌபிக், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஜெத்ரோ திருச்சி ஸ்ரீரங்கம், யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஜே.ஜே. நகரில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜெத்ரோவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் காவல்துறை அதிகாரி என பொய் கூறி தௌபிக்கிடம் ₹1 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் ஜெத்ரோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.