கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளனர்.
Advertisment
இந்தநிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது தொடர்பாக சாட்சிகளின் அடிப்படையில் மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பபட்டு கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் 3 பேரும் நேற்று (பிப்ரவரி 7) காலை 10:30 மணி அளவில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர்.
Advertisment
Advertisements
3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் மதியத்திற்கு மேல் தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன், எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும் சுமார் மூன்று மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றுள்ளது. சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைக்குப் பின் கர்சன் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக எனக்கு கடந்த 3-ம் தேதி சமன் அனுப்பபட்டது. 7-ம் தேதி ஆஜராக கூறிப்பட்டிருந்தது. அதன்படி நான் ஆஜரானேன், போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினார்கள், முதன்முறையாக நான் விசாரணை செய்யப்பட்டுள்ளேன். 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது" என்று கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/