திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின். இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.
இந்த நிலையில் திருச்சி புதிய வெங்காய மண்டி சர்வீஸ் சாலையில் சென்றபோது அங்கு போலீஸ் உடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார்.
பின்னர், தன்னை போலீஸ்காரர் என அறிமுகம் செய்த அவர் ஆர்.சி. புக், லைசன்ஸ் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதன் பின்னர், தியாசின் மற்றும் அந்தப் பெண்களின் கைகளில் இருந்த 4 செல்போன்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதை அடுத்து,, பாதிக்கப்பட்ட தியாசின் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் செல்போன்களை பறித்துச் சென்றவர் அரியமங்கலம் திடீர் நகர் மேல அம்பிகாபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பதும், திருவரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிவேலை கைது செய்தனர்.
இவர் கடந்த 9-ம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த போலீஸ்காரர் மீது அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"