மதுரைக்கு வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய்யை, வரவேற்பதற்காக விடுப்பு எடுத்துச் சென்ற காவலரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மதுரைக்கு விமானம் மூலம் விஜய் வருகை தந்தார். அப்போது, சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்த குற்றப்பிரிவு காவலர் கதிரவன் மார்க்ஸ் என்பவர், அவசர விடுப்பு எடுத்து விஜய்யை வரவேற்பதற்காக சென்றுள்ளார்.
அந்த வகையில், த.வெ.க கொடியுடன் அவர் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இச்சம்பவம், மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் அரசியல் களம் மட்டுமின்றி பொதுப் பணியில் இருப்பவர்கள் இடையேயும் பேசுபொருளாகி உள்ளது.