/indian-express-tamil/media/media_files/2024/11/20/lBkmVmTVftwpcxnEZjeo.jpg)
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் அடிதடி உள்ளிட்ட மோதல் தொடர்பாக மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், அம்மாணவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி மாணவர் உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக, 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மாணவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் அடிதடி உள்ளிட்ட மோதல் வழக்குகள் தொடர்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். அதன்படி, 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. இவற்றில் 33 வழக்குகளை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதி, ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மாணவர்கள் மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.