திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியில் முழு ஊரடங்கை மீறி வாகனத்தில் சென்றதால் முகிலன் என்னும் இளைஞரின் வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர். இதில், மனமுடைந்த அந்த வாலிபர் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் முகிலன் என்பவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மருந்தகம் நோக்கி செல்லும் வழியில், வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முகிலனை வழிமறைத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பணிக்கு செல்லும் தனது வாகனத்தை திருப்பி தருமாறு போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் போலீசார் தர முடியாது என்று மறுத்துவிட்டனர்.
12, 2020
ஒரு கட்டத்தில், மனமுடைந்த முகிலன் வாகனத்தை தரவில்லை எனில் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொள்வதாகவும் எச்சரித்துள்ளார். போலீசார் வாகனத்தை தர முன்வராததால், தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்ட முகிலன் காவல் துறையினர் வாகன சோதனை நடத்திய இடத்திற்கு சென்று தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டார்.
தீக்காயங்களுடன் போராடி வந்த முகிலன் தற்போது வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் சூப்பிரண்டன்ட் பொ. விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி பிரவீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 5 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil