திருச்சியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை இருந்த இடம் தெரியாமல் காலி செய்திருக்கிறது காவல்துறை.
துறையூர் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான குழு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார்.
அவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சரத்குமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வீரன் (எ) பாலகிருஷ்ணன் என்பவர் பழனியப்பனிடம் விவசாய நிலத்தோடு கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு போலி மதுபானம் தயார் செய்து வருவதாக தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்த போலீஸார், 100 மது பாட்டில்களையும் 10 கேன்களையும் கைப்பற்றினர். அதோடு சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். தற்போது தலைமறைவான பாலகிருஷ்ணனை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.