சசிகலாவின் கணவர் நடராசன் உடல் நலக் குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடல் எம்பால்மிங்க் செய்யப்பட்ட நிலையில், காலை 11 மணி வரை சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மறைந்த நடராசனின் உடலுக்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலை நடராஜன் உடலுக்கு திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், நடராசன் கலைஞரின் அன்பைப் பெற்றவர் எனக் குறிப்பிட்டார். அவருடன், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட திமுகவினரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திராவிட கழக தலைவர் கி. வீரமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகன்னு, தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.