Advertisment

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு ஸ்டாலின், திருமா, சீமான், விஜய் கண்டனம்

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரத்தில், ஸ்டாலின், திருமாவளவன் போன்ற தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amit shah

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, “இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” எனக் கூறினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு அரசியல் களம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

விஜய் கண்டனம் 

Advertisment
Advertisement

இந்நிலையில், அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 'அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.' என்று  அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 

சீமான்  கண்டனம்

அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,‘அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்.

உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

“அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்” என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் தாத்தா ஜீவானந்தம். அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் அண்ணல் அம்பேத்கர்.

“எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?" என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கண்டனம் 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

திருமா கண்டனம் 

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனும் தனது எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? 

எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். 

அரசமைப்புச் சட்டமும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். 

சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப்  போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். 

புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!" எனத் தெரிவித்திருந்தார்.

 

ஜெயக்குமார் கண்டனம் 

அ.தி.மு.க முக்கிய தலைவரான ஜெயக்குமாரும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பா.ஜ.கவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். 

இந்தியா முழுவதும் போற்றப்படக் கூடிய மாபெரும் தலைவர் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக் கூடிய செயலை செய்யக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 செல்வப்பெருந்தகை கண்டம்  

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய திருநாட்டில் யாராக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நகர்வுகள் நடப்பதில்லை என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும், பாபாசாகேப் அவர்களைப் பற்றி மாநிலங்களவையில் அமித்ஷா பேசியவை சங் பரிவார் கூட்டத்தின் எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அம்பேத்கர் அவர்களை இகழ்வதால் அவருடைய புகழ் மறைய போவதில்லை. அமித்ஷா மட்டுமல்ல, யார் வந்தாலும் அவரது புகழை அழிக்கவோ தவிர்க்கவோ இயலாது. இன்றும் என்றும் என்றென்றும் தேவையாக இருக்கிறது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியல்.

அமித்ஷா சார்ந்திருக்கும் சங் பரிவார கூட்டத்திற்கு பாபாசாகேப் இயற்றிய இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. அம்பேத்கர் அவர்களின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதின் வெளிப்பாடு தான் அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சு. அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவர்  தெரிவித்துள்ளார் .

சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம் 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அம்பேத்கரின் பெயரை சொல்லுவது பேஷன் ஆகிவிட்டது என்கிறார் அமித்ஷா

உங்களுக்கு இவ்வளவு எரிச்சலை கொடுக்கும் அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bjp Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment