/tamil-ie/media/media_files/uploads/2018/03/21mayRMNRAJA-G2U1PB8273jpgjpg.jpg)
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பக்கத்தில், ”லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபூராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை.”, என பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைத்தெறிக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
”தந்தை பெரியார் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதி கூட யாருக்கும் கிடையாது. வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பெரியார் சிலையை தொட்டுப்பார்க்கக்கூட தகுதியற்ற ஹெச்.ராஜா, பெரியார் குறித்து விமர்சிப்பதா?”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ”பெரியார் சிலையை தொட ராஜா மட்டுமல்ல அவருடைய முப்பாட்டன் வந்தாலும் முடியாது”, என கூறியுள்ளார்.
"பெரியார் சிலை மீது கை வைத்தால் நடப்பதே வேறு.", என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து சர்ச்சைக்குரிய அப்பதிவை எச்.ராஜா நீக்கிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.