/indian-express-tamil/media/media_files/2025/09/10/annamalai-coimbatore-2025-09-10-11-18-02.jpg)
'சனிக்கிழமை மட்டும்தான் அரசியல்?...' விஜய்யை விமர்சித்த அண்ணாமலை
சனிக்கிழமைகளில் மட்டும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் கூறுவது ஏற்புடையதல்ல என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முழுநேர அரசியல் செய்வோரே மக்களின் நம்பிக்கையை பெறுவர் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, த.வெ.க களத்தில் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றார். "சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் எனச் சொல்வது, த.வெ.க-வின் வேகத்தை மக்கள் நம்புவதற்கு உதவாது. மாற்று அரசியல் எனச் சொல்லும் த.வெ.க, சனிக்கிழமை மட்டுமல்லாது, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். மேலும், காவல்துறை மீது குறை கூறுவதை விடுத்து, நீதிமன்றத்தின் மூலம் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி பெற தவெக முயற்சிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை கூறினார். "அவர்கள் வருத்தத்தில் முடிவு எடுத்திருக்கலாம். பொறுத்திருப்போம், காலம் கனிந்து வரும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல தலைவர் என்றும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் எதிர்பார்ப்புகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளிப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.