கடந்த சில நாட்களாக தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி சம்பவம்.
பெரும் கும்பலால் 7 வருடங்களாக நடந்து வருவதாக சொல்லப்படும் இந்த வன்கொடுமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது குண்டர் சட்டம் சுமத்தப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எஸ்.பி வெளியிட்டது, பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதற்கிடையே பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் டி.ஜி.பி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.