பொள்ளாச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கிய கும்பலிடம் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய அந்த நபர், அந்தப் பெண்ணை கடந்த 12ம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அப்பெண்ணை தங்கள் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து, அதைக்காட்டி மிரட்டி அப்பெண்ணிடம் இருந்த நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க - Pollachi Sexual Abuse Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு லைவ்
அதிர்ச்சியடைந்த அப்பெண், பெற்றோரிடம் இதைத் தெரிவிக்க, அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடத்திய போலீசார் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற மூன்று பேரை கைது செய்தனர். அவர்களின் செல்போனில் இருந்து 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க - பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குற்றவாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், சில அரசியல் பிரமுகர்களால் அவர் காப்பாற்ற முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிடிப்பட்ட நபர்களின் செல்போனில் இருந்ததாக அறியப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பெண் ஒருவர் மிரட்டப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் இதுகுறித்து கடுமையாக தங்கள் விமர்சனங்களை சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மீ டூ இயக்கம் மூலம் பாலியல் அவலங்களை முன்னெடுத்து வரும் பாடகி சின்மயி, இயக்குனர் கரு பழனியப்பன் என பலரும் இதுகுறித்து தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், சமூக தளங்களில் பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.